February 22, 2009

யார் பொறுப்பு

சமூகத்தில் படர்ந்த அனாச்சாரயார் பொறுப்பு லீலைகள் பல. அவற்றுள் மிகக் கொடியது பாவகரமானது இஸ்லாத்தின் மூலக் கொள்கை ஏகத்துவத்தையே முறியடிக்கும் தன்மை கொண்டது இறைவனுக்கு வைக்கும் சமாதி வணக்கம். இந்த நிலை ஓரளவு மாறுதல் அடைந்துவிட்டால் பிற சில்லரை அனாச்சார அனுஸ்டானங்களெல்லாம் நாளடைவில் தாமாகவே விடுதலை பெற்றுவிடும் அதற்கு போறாட்டங்களும் கிளர்ச்சிகளும் தேவை இராது.சில்லரை அனாச்சாரங்கள் என்பது, சொறுகப்பட்டிருக்கும் மின்சார பல்புகள் போன்றவை. அவைகளை உடைத்து விடுவதால் பயனில்லை. வேறு பல்புகள் மாட்டிவிடப்படலாம். எரிவதற்கு இயங்க வைக்கும் இயந்திரம் வேறிடத்தில் இருக்கிறது. அது மெயின் சுவிட்ச். அதை இயங்காமல் செய்து விடுவதால் மட்டுமே தான் கருதிய பலன் கைகூடும். இந்த மூலத்தை இரகசியத்தை உணர்வதில்லை.சில்லரை அனாச்சார செய்கைகளை கண்டிக்கவும், திருத்தவும் ஈடுபடுகிறோம். அவை வீண் வேலை! பலிபீடம் அங்கல்ல! தர்கா மணி மண்டபங்களுக்குள் இருக்கின்றது. அவைதான் தகர்க்கப்பட வேண்டும். அப்படித் தகர்த்துவிட்டால் ஏகத்தவத்தன்மைக்கு இழிவும் பாதகமும் ஏற்படாது. சமூகம் தாழ்ந்து கொண்டே போகாது.இந்த உண்மையை உணர்ந்து கொண்ட உணர்ச்சி மிகுந்த தொண்டர்கள் பலர், கல்லரை வணக்க ஒழிப்புப் பணியில் கருத்தை செலுத்துகிறார்கள். இதகைய புனிதமும் ஜீவாதாரமுமான தொண்டு புரிய இலாயக்குள்ளோர் மதகுருமார்களான மெªலவிகள் தான் என்பது நம்மிடை நிலவி வரும் தவறான கருத்து. இம்முறையில் அந்த தொண்டு புரிபவன் தூற்றப்படுகிறான், மிறட்டப்படுகிறான். மார்ர்கப் புலமையற்ற மடையா, இந்த பணி புரிந்திடலாமோடா? எனப் பரிகசிக்கப்படுகிறான், கண்டிக்கப்படுகிறான்! காரசாரமாக!அனாச்சாரங்களை கண்டிக்கும் இலட்சியத்தோடு அறப்போர் புரிபவன் மிஷ்காத்தை கரைத்துக் குடித்தவனாக இருக்கவேண்டியதில்லை 5, 7, 10 ஆண்டுகள் என்று அரபி மதரஸாக்களில் கற்றுத் தேர்ந்து படாடோபங்களோடு காட்சி தரவேண்டியதில்லை. கலைகள் பலவற்றில் சட்ட நுணுக்க வல்லுனர்களாக ஆராய்ந்தறிந்த சாஸ்திரியாக இருக்கத்தான் வேண்டுமென்ற விதியும் இல்லை. அனைவராலும் அது முடியக்கூடிய காரியமா? இஸ்லாம் அப்படி ஏதேனும் சட்டம் விதிக்கவில்லை. ஒவ்வொருவனுக்கும் மதப்பணியைக் கடமையாக்கி இருக்கிறது."லாயிலாஹா இல்லல்லாஹூ" இந்தக் கலிமா மந்திரத்தை ஓதி விட்டாலே போதுமே கல்லறை வணக்கம், ஆண்டவனுக்கு இணைவைக்கும் இழி செயல் இஸ்லாத்துக்கு ஆகாது. அது விலக்கப்படவேண்டும் என்ற கருத்தைப் பெற அதைச் செயலாக்கிக்காட்டும் துணிவைப் பெற. இதற்காக மார்க்க ஞானங்களை எல்லாம் துருவிப்பார்க்க வேண்டியதில்லை! அதன் மூலம் சன்னதுகள் தேவையில்லையே!ஓர் கலியாண வீடு என்று வைத்துக்கொள்வோம். பாடகர் ஒருவர் வரவழைக்கப்பட்டிருக்கிறார். அந்தப் பாகவத சிகாமனி, மயான காண்ட ஒப்பாரி மாலை பாடுகிறார். கூடியிருந்து கேட்டோர் கனன்றெழுந்து ஓய்! பாகவதரே, உன்பாடலை நிருத்தும்! நீயும் ஒரு பாடகனா? காலமுணர்ந்து பனியாற்றும் இசைவாணனா? மங்களகரமான விழாவில் கல்யாணி ராகம் படுவதை விட்டு, முகாரி பாடலாமா? என்று கேட்கிறார்கள். என் பாடலை ரசிக்க வந்த மகாஜனங்களே, உங்களுக்கு ரசிக்கும் தன்மை கிடையாது. நீங்கள் என்னைப்போல் பாகவதர்களா? பட்டம் பெற்றவர்களா? சங்கீதக் கலை கற்றவர்களா? சினிமா டிராமாவில் நடித்தீர்களா? இந்நிலையில் நீங்கள் என்னைக் கண்டிப்பதா? கனல் கக்கும் விழிகளை உருட்டி மிரட்டிக்காட்டுவதா? இப்படிப் பதறித் துடித்து பதில் தருகிறார் பாகவதர் என்று கற்பனை செய்து கொள்வோம்.இந்நிகழ்ச்சிப்படி பாகவதரின் கருத்துப்படி, தவற்றைக் கண்டிக்க முற்பட்டது தகாது என விழங்குகிறது. இது பொருத்தமா? நேர்மையா? பகுத்தறிவுக்கு ஏற்றதா? சங்கீதக் கலை தெரிந்தவர்கள்தான் கண்டிக்க வேண்டும், திருத்தும் பணியில் ஈடுபடவேண்டும் என்பதா? இது முறையா? கூடுமா? முடியக்கூடிய காரியமா? பாகவவதரைப்பற்றி என்னகருத்து உதிக்க முடியும்?அதேபோல் நம்மில் சில மவுலவிமார்கள் பட்டமும், ஆடை அலங்காரப்பட்டும் இல்லாத மதப்பணியாளர்களை தூற்ற ஆரம்பித்திருக்கிறார்கள்! நம்மைக் குறை கூற இவர்களுக்கென்ன அந்தஸ்துண்டு? உரிமை உண்டு? எனக் கொக்கரிக்கிறார்கள்.இந்நிலை மாறவேண்டும், மதப் பணிபுறிய ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உரிமையிருக்கிறது என்ற உயரிய எண்ணங்கள் கொண்ட இதயங்கள் பெருகவேண்டும். அதற்கு எல்லோருக்கும் வாய்ப்பும் வசதியும் அளிக்கப்படவேண்டும். அதுவரை ஏமாற்றுவோர், ஏமாற்றப்படுவோர் இருந்தேதான் தீருவர். சமூகம் சீரழிந்து கொண்டேதான் போகும்.

No comments:

Post a Comment