March 26, 2010

குர்ஆனும் நீர்ச் சுழற்சியும்

இஸ்லாத்தில், நீர் என்பது அல்லாஹ்வின் மிகப் பெரும் கொடையாகக் கருதப்படுகின்றது. அது தனிநபருக்கு மாத்திரம் உரியதல்ல. மனித சமுதாயம் முழுவதற்குமுரிய நீர் மற்றும் ஏனைய வளங்கள் அனைத்தினதும் பாதுகாவலர்கள், மனிதர்களே.



நீர் விநியோகமானது இஸ்லாத்தில் மிகத் தெளிவான சட்ட நடைமுறையைக் கொண்டுள்ளது. பொதுப் பிரயோகத்தில், அதன் சட்டங்கள், அதனைப் பயன்படுத்தும் அனைத்து மக்களையும் அடிப்படையாகக் கொண்டவையாகும். நீர்ச் சட்டங்கள் அதன் மூலப்பொருளின் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளன. வளத்தின் அளவு, நீரின் வகை, மற்றும் அதன் பாவனை என்பவற்றின் அடிப்படையில் இந்த நீர்ச் சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.



இதன்படி, இந்த நீர் வளங்களானவை, ஆறுகள், கிணறுகள், மற்றும் மழை நீர் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, இயற்கை ஆறுகள், சிறிய மற்றும் பெரிய ஆறுகள், மற்றும் மனிதன் உருவாக்கிய கால்வாய்கள் மற்றும் நீர்ப்பாசனங்கள் என ஆறுகள் பிரிக்கப்பட்டுள்ளன.



நீர்ச் சுழற்சி பற்றி பின்வரும் அல்குர்ஆன் வசனம் அறிவுறுத்துகின்றது:

'(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ்தான், மேகத்திலிருந்து மழையைப் பொழிவித்து, அதனைப் பூமியில் ஊற்றுக்களாக ஓடச் செய்கின்றான். பின்னர், அதனைக் கொண்டு பல வர்ணங்களையுடைய (பலவகைப்) பயிர்களை அவன் வெளிப்படுத்துகின்றான். பின்னர் (கதிர்) முற்றி, அவை மஞ்சள் வர்ணமாக இருக்கக் காண்கின்றீர். பின்னர், அதனைக் (காய்ந்த) சருகுகளாக்கி விடுகின்றான். நிச்சயமாக இதில் அறிவுடையோருக்கு நல்ல படிப்பினை இருக்கின்றது' (அல்குர்ஆன் 39:21)




மனித ஜீவியத்தில் நீரின் பங்கு பற்றி வலியுறுத்தும் அல்குர்ஆன் வசனங்கள் இன்று நிரூபணமாக ஏற்கப்படுகின்றன. இதற்கான காரணம் எளிமையானது. எமது காலத்திலும் இன்றைய நாட்களிலும் இயற்கையிலுள்ள நீர்ச் சுழற்சி பற்றி அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளன.



நீர்ச்சுழற்சி பற்றியும், மனித வாழ்வில் நீரின் இன்றியமையாத் தன்மை பற்றியும் விளக்கிய முதலாவது நூல் புனித அல்குர்ஆனாகும். புதிய நீர், சுவைநீர், மற்றும் தூய்மையான நீர் என்பவற்றை அவற்றின் இயல்பைக் கொண்டு மனிதன் பிரித்து நோக்க முயன்ற வேளை, அவற்றின் அமைவிடத்தைக் கொண்டு பிரித்து நோக்கியது அல்குர்ஆனாகும். அந்த புனித அல்குர்ஆனிலுள்ள ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு சொல்லும் அற்புதமானவையும் சத்தியமானவையும் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாக உள்ளது.

March 15, 2010

இறை இல்லங்களுக்கு இணையான தர்ஹாக்கள்!

இஸ்லாத்தைத் தவிர ஏனைய மதங்கள் அனைத்தும் இசையை ஒரு வணக்கமாகவும் வழிபாடாகவும் கருதுகின்றன. அதனால் தான் கோயில்களிலும் சர்ச்சுகளிலும் இசைக் கருவி வாத்தியங்கள் வாசிக்கப் படுகின்றன. மேள தாளங்கள் முழங்கப் படுகின்றன.

இதற்கு இஸ்லாம் ஒரு விதிவிலக்கு! இஸ்லாம் இதை எதிர்த்து நிற்கின்றது. எனவே உலகெங்கிலும் உள்ள பள்ளிவாசல்களில் ஒரு பள்ளிவாசலில் கூட இன்னிசைப் பாட்டுகள் இடம் பெறுவதில்லை.

இந்த அடிப்படையில் தான் தொழுகைக்கு அழைக்கப்படும் இஸ்லாமிய அழைப்பு என்பது மணியோசையாகவோ, ஊதியின் நாதமாகவோ இல்லாமல் ஒரு வித்தியாசமான, செவிக்கு இதமான பாங்கோசையாக அமைந்திருக்கின்றது.

மக்களின் எண்ணிக்கை அதிகமான போது, அவர்கள் அறிந்திருக்கின்ற ஏதாவது ஒரு முறையில் தொழுகையின் நேரத்தை அறிந்து கொள்ள ஆலோசித்தனர். அப்போது நெருப்பை மூட்டுவதன் மூலமோ மணி அடிப்பதன் மூலமோ அறிந்து கொள்ளலாம் என கருத்து சொல்லப்பட்டது. ஆனால் பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால் (ரலி) கட்டளையிடப்பட்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 606

மாற்று மத நண்பர்கள் கூட தங்கள் திருமணம் மற்றும் இன்னபிற திருவிழாக்களின் ஊர்வலங்கள் பள்ளிக்கு அருகில் வரும் போது மேள தாளங்களை, இசை வாத்தியங்களை நிறுத்திக் கொள்கின்றார்கள். அந்த அளவுக்கு இசைக்கும் இஸ்லாத்திற்கும் தூரம் என்று மாற்று மத நண்பர்கள் கூட விளங்கி வைத்திருக்கின்றனர்.

இப்படிப்பட்ட இந்த விளக்கம் முஸ்லிம்களுக்குத் தெரியாமல் போய் விடுமா? நிச்சயம் இவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
அதனால் தான் இஸ்லாம் தடுத்துள்ள இன்னிசைப் பாட்டுக் கச்சேரிகள், மேள தாளங்கள், கரகாட்டங்கள், வெடி முழக்கங்கள், நடிகர் நடிகையரின் நடனங்கள் போன்ற கூத்துக்களை எல்லாம் பள்ளிவாசலில் செய்யாமல் தர்ஹாக்களில் அரங்கேற்றி அவற்றின் மீது இவர்கள் கொண்டுள்ள மோகத்தையும் தாகத்தையும் தணித்துக் கொள்கின்றனர்.

இந்த மோகத்தின் வெளிப்பாடாகத் தான் கந்தூரியில் யானை கொடி ஊர்வலமும், வானை நோக்கிப் பறக்கும் வெடி முழக்க வெறித்தனங்களும் அரங்கேறின. தொடர்ந்து நாயகம் வாப்பா கொடி, அப்துர்ரஹ்மான் தங்கள் கொடி, பஸீரப்பா கொடி போன்ற கொடியேற்றங்களும் கொண்டாட்டங்களும் நடந்தேறுகின்றன.

ஆனை மீது ஆலிம்சா

ஐதுரூஸ் தங்கள் கொடி ஊர்வலத்தில் வாண வேடிக்கைகளும், டிஜிட்டல் மியூசிக்கும் சிறப்பம்சங்கள் என்றால், நாயகம் வாப்பா எனப்படும் கொடி ஊர்வலம் அதை மிஞ்சும் வகையில் அமைந்திருக்கும்.

துருக்கி குஞ்சா தொப்பி போட்ட கீழக்கரை கிழடுகளின் சுழல் தப்ஸ் ஆட்டமும், வாலை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாட்டு மெட்டில் தூள் பறத்தும் பேண்டு வாத்தியமும், அவற்றுக்குத் தக்கவாறு விசில் அடித்துக் கொண்டு ஆட்டம் போட்ட சிறுவர்கள், இளைஞர்களின் படை பட்டாளங்களும் நாயகம் வாப்பா என்ற கொடியின் சிறப்பம்சங்கள் ஆகும்.

இவை அத்தனைக்கும் மெருகூட்டுவது போல் ஊர்வலத்தில் வந்த யானையின் மீது மதரஸாவில் ஏழு வருடம் படித்து பட்டம் பெற்ற ஆலிம்சா ஒருவர் அமர்ந்து கொண்டு உலா வருவதுதான். இந்தத் தீமையிலிருந்து மக்களைத் தடுக்க வேண்டிய ஆலிம்கள் இதில் பங்கெடுத்துக் கெடுக்க வேண்டிய நிலைக்குப் போய் விட்டதால் தான் இந்தக் கொடியேற்றக் கொண்டாட்டங்களும், வெடி முழக்க வெறித்தனங்களும் வீரியம் பெற்றுள்ளன.

நாயும் மணியும் இருக்கும் ஜமாஅத்தில் மலக்குகள் உடன் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: முஸ்லிம் 3949
திர்மிதீ 1625, நஸயீ 5127
அபூதாவூத் 2192, அஹ்மத் 7250

மணி ஷைத்தானின் இசைக் கருவியாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: முஸ்லிம் 3950
அபூதாவூத் 2193, அஹ்மத் 8428

இந்த ஹதீஸ்களில் சாதாரண மணி ஓசையையே ஷைத்தானின் இசைக் கருவி என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கும் போது இந்தப் பேண்டு வாத்தியங்களைப் பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை.

இந்த ஷைத்தானியப் படை தான் கொடியைத் தூக்கிக் கொண்டு வீதிகளில் உலா வருகின்றனர். இதற்கு ஓர் ஆலிம்சாவின் தலைமை வேறு!
விடலைப் பையன்களின் விசில் ஓசைகள்! குமரிப் பெண்களை நோக்கி அவர்கள் பாய்ச்சுகின்ற காமப் பார்வைகள்! கால்நடைகளும் பறவைகளும், தொட்டிலிலில் தூங்கும் குழந்தைகளும், நோயாளிகளும் அலறும் வண்ணம் முழங்கும் வெடிச் சப்தங்கள்! இத்தனையும் வணக்கம் என்ற பெயரில் அரங்கேறுகின்றன.

இடி முழக்கம் போன்ற இசைகளையும், வெடி முழக்கங்களையும், கரகாட்டங்களையும், கானா கச்சேரிகளையும் சாதாரண முறையில் அரங்கேற்றினால் ஈமான் உள்ள (?) இந்த ஆலிம்கள் சீறிப் பாய்வார்கள்.
அவ்லியாக்கள் பெயரில் அரங்கேற்றினால் ஆலிம்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். அவர்கள் அதற்கு ஆதரவாக யானை மீதேறி உளம் பொங்க, உவகை பெருக்கோடு வலம் வந்து ஆசி வழங்குவார்கள்.

இத்தகைய அலங்கோலங்கள், அனாச்சாரங்கள் மூலம் இந்த ஆலிம்களும் தர்ஹா டிரஸ்டிகளும், தரீக்கா குருட்டு பக்த கோடிகளும் மக்களை அறியாமைக் கால இருட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர். அறியாமைக் கால மக்களின் வணக்கம் இப்படித் தான் அமைந்திருந்தது.
சீட்டியடிப்பதும், கை தட்டுவதும் தவிர (வேறெதுவும்) இந்த ஆலயத்தில் அவர்களின் தொழுகையாக இருக்கவில்லை. “நீங்கள் (ஏக இறைவனை) மறுத்துக் கொண்டிருந்த காரணத்தினால் வேதனையை அனுபவியுங்கள்!” (என்று கூறப்படும்)
அல்குர்ஆன் 8:35

அல்லாஹ் எவற்றையெல்லாம் கயமைத் தனம் என்று கழித்துக் கட்டுகின்றானோ அவற்றைத் தான் இவர்கள் அவ்லியாக்களின் பெயரால் மார்க்க வணக்கம் என்று கருதி செய்து கொண்டிருக்கின்றனர்.
தீமைகளின் தீய கூடாரம்

இந்தத் தீமைகளுக்கு அஸ்திவார மாகவும் ஆணி வேராகவும் தர்ஹாக்கள் தான் அமைந்துள்ளன.
சுருக்கமாகச் சொல்லப் போனால் அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களுக்கு எதிரான செயல்கள் நடக்கும் இணை (ஷிர்க்) இல்லங்களாக இவை எழுந்து நிற்கின்றன. இன்னும் சொல்லப் போனால் கோயில்களுக்கு மறு பெயர் தான் தர்ஹா என்று கூறி விடலாம்.
அங்கே சிலை வணங்கப் படுகின்றது. இங்கே கல்லறை வணங்கப்படுகின்றது. இரண்டுக்கும் வித்தியாசம், அங்கே நட்டி வைக்கப்பட்டிருக்கின்றது. இங்கே படுக்க வைக்கப்பட்டிருக்கின்றது.

அங்கேயும் குத்து விளக்கு! இங்கேயும் குத்து விளக்கு!
அங்கே சூடம்! இங்கே பத்தி, சாம்பிராணி!
அங்கே திருநீறு! இங்கே சந்தனம்!
அங்கே பால் அபிஷேகம்! இங்கே சந்தன அபிஷேகம்!
அங்கே தேங்காய், வாழைப்பழம்! இங்கே வெறும் வாழைப்பழம்!
அங்கே சிலைகளைச் சுற்றி வலம் வருதல்! இங்கே கப்ருகளைச் சுற்றி வலம் வருதல்!
அங்கே தேர்த் திருவிழா! இங்கே சந்தனக் கூடு திருவிழா!
அங்கேயும் யானை! இங்கேயும் யானை!
அங்கே யானையின் நெற்றியில் சூலம்! இங்கே யானையின் நெற்றியில் பிறை!
அங்கேயும் கொடியேற்றம்! இங்கேயும் கொடியேற்றம்!
அங்கே பூசாரி! இங்கே ஆலிம்சா!
அங்கும் வெடி, வாண வேடிக்கைகள்! இங்கும் வெடி, வாண வேடிக்கைகள்!
அங்கு சிலைகளுக்கு மேல் பட்டுப் புடவைகள், பூமாலைகள்! இங்கு கப்ருகளுக்கு மேல் பச்சைப் போர்வைகள், பூமாலைகள்!
திருவிழாவின் போது மேள, தாள வாத்தியக் குழுவினர் ஒரு குவார்ட்டரை உள்ளே தள்ளி விட்டு அந்த நாற்றத்துடன் மேள, தாளம் முழங்கி நாதஸ்வரம் ஊதுவர்.

அதே குழுவினர் தர்ஹாவுக்கும் அழைக்கப்படுகின்றனர். (அண்மையில் மேலப்பாளையத்தில் பஸீரப்பா கந்தூரியின் போது இக்குழுவினர் அழைக்கப்பட்டனர்)

கோயில் கொடை விழாக்களில் டிஜிட்டல் வாத்தியங்கள் உண்டு! இங்கும் டிஜிட்டல் இசை வாத்தியங்கள் உண்டு!
கோயிலை விட இங்கு இசைக் குழுவினர் கூடுதலாக அழைக்கப் படுவர். கீழக்கரை கிழடுகளின் தப்ஸ் குழு, கயிறு சுற்றும் தயிரா குழு, பக்கீர் குழு போன்ற பல்வேறு குழுக்கள் இங்கு அழைக்கப்படுகின்றன. அந்த வாத்தியக் குழுவினர் குவார்ட்டரை உள்ளே இறக்கி விட்டு ஊதுவார்கள். இவர்கள் கஞ்சாவைக் கசக்கி அடித்துக் கொண்டு கொட்டு அடிப்பார்கள். அவ்வளவு தான் வித்தியாசம்.

கோயில் விழாக்களின் போது கிடா அறுத்து சோறு படைப்பார்கள். அது போல் இங்கும் கிடா அறுத்து கடாலப் பானை வைத்து சோறு படைத்து நேர்ச்சை விநியோகம் செய்வார்கள்.

இங்கே பட்டியலிட்ட இந்தக் காரியங்களை அல்லாஹ்வுடைய பள்ளியில் வைத்து அரங்கேற்ற முடியுமா? நிச்சயமாக அரங்கேற்ற முடியாது. அதற்காகத் தான் இந்த தர்ஹாக்கள் எனும் தரித்திர மண்டபங்கள்.

தர்ஹாக்களுக்கு அனுமதி
பள்ளிவாசலுக்குத் தடை

இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில் பள்ளிவாசல்களுக்குத் தொழ வருவதற்குத் தடை விதிக்கும் இந்த ஆலிம்கள் தர்ஹாக்களுக்குப் பெண்கள் வருவதற்குத் தாராளமாக வாசல்களைத் திறந்து விட்டிருக்கின்றனர். அதனால் இந்த தர்ஹாக்கள் விபச்சாரத்திற்கு வலை விரிக்கும் வலைத் தளங்களாக, விடுதிகளாக மாறியிருக்கின்றன.

இப்படி தீமைகளின் ஊற்றுக்கள் பெருக்கெடுத்து ஓடும் திராவக அருவிகளாக தர்ஹாக்கள் அமைந்திருக்கின்றன. இதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த இடங்களைச் சபிக்கின்றார்கள்.

சாபத்திற்குரிய சன்னிதானங்கள்

நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன் நோயுற்றிருந்த போது, “யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டனர்” என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையென்றால் நபி (ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப் பட்டு விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1244

உம்மு ஹபீபா (ரலி) அவர்களும், உம்மு ஸலமா (ரலி) அவர்களும் தாங்கள் அபீசீனியாவில் கண்ட, உருவங்கள் இடம் பெற்ற கோவிலைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் ஒரு நல்ல மனிதர் வாழ்ந்து மரணித்து விட்டால் அவரது அடக்கத்தலத்தின் மேல் ஒரு வணக்கத்தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் படைப்பினங்களிலேயே அவர்கள் தாம் மிகவும் கெட்டவர்களாவர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரி 427, 434, 1341, 3873, முஸ்லிம் 822

இன்று தர்ஹாக்களில் உழைக்காமல் ஊது பத்திகளைக் கொளுத்திக் கொண்டு, உண்டியலை மட்டும் நம்பிக் கொண்டு, தர்ஹாக்களின் பக்கம் மக்களை அழைத்துக் கொண்டு பரம்பரை ஹக்தார்கள், டிரஸ்டிகள் என்று வயிறு வளர்க்கும் பண்டார சன்னிதானங்களையும், அவர்களுக்குத் துணை நிற்கும் பணக்கார சுகவாசிகளையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படைப்பினத்திலேயே கெட்டவர்கள் என்று கூறுகின்றார்கள்.
அதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது சமுதாய மக்கள் எரி நரகத்திற்குச் சென்று விடக் கூடாது என்ற தூய கரிசனத்துடன், தூர நோக்குடன், தீர்க்க தரிசனத்துடன் இந்த தர்ஹாக்களை தரை மட்டமாக்க வேண்டும் என்று சொல்கின்றார்கள்.
“தரை மட்டத்திற்கு மேலுள்ள எந்த ஒரு கப்ரையும் தரை மட்டமாக்காமல் விட்டு விடாதே” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்கள்: முஸ்லிம் 1609, அஹ்மத் 1175, திர்மிதீ 970, அபூதாவூத் 2801

மக்கள் வரிசையாகக் கந்தூரிகள் கொண்டாடி நரகத்திற்குச் செல்வதற்குக் காரணமாக விளங்குவது இந்த தர்ஹாக்கள் தான். இந்த தர்ஹாக்கள் தரை மட்டமாக்கப்பட வேண்டும் என்ற நபி (ஸல்) அவர்களின் கட்டளையைப் பள்ளிவாசல்களில் ஆலிம்கள் சொல்வது கிடையாது.
ஆலிம்கள் இந்த சத்தியத்தை மறைப்பதுடன், தர்ஹாக்களில் போய் அதிலும் குறிப்பாக கந்தூரி தினத்தன்றே போய் பயான் செய்கின்றார்கள். பாழாய் போன இந்த இடங்களில் பயான் வேறு வாழ்கின்றது.

என்ன தான் இவர்கள் சத்தியத்தை மறைத்தாலும் இன்று ஏகத்துவத்தை விளங்கிய ஓர் இளம் தலைமுறை தோன்றியிருக்கின்றது.
அவர்கள் எதிர்காலத்தில் சமுதாய மக்களின் சம்மதத்துடன் இந்த தர்ஹாக்களை தரை மட்டமாக்கி விட்டு, அவற்றை பாடசாலைகளாக, தொழிற்பயிற்சிக் கூடங்களாக அல்லது வீடின்றி தவிக்கும் ஏழைகள் வசிக்கும் இடங்களாக மாற்றும் அந்த நாள் தூரத்தில் இல்லை, இன்ஷா அல்லாஹ்!
thanks to tntj...

முஹ்யித்தீன் மவ்லித் ஒரு பார்வை

தமிழக முஸ்லிம்களில் பெரும்பாலோர் மவ்லிதுகள் எனும் பாடல்களைப் புனிதமான வணக்கமாக எண்ணி ஓதி வருகின்றனர். இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமைகளான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய கடமைகளை நிறை வேற்றாதவர்கள் கூட இந்த மவ்லிதுகளைப் பாடுவதை மட்டும் விடாப்பிடியாக நிறைவேற்றி வருவதிலிருந்து இதை அறியலாம்.

மிக முக்கியமான கடமையாகக் கருதப்படும் இந்த மவ்லிதுகள் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் புனிதமானவையா? அல்லது அனுமதிக்கப்பட்டவையா? அல்லது தடை செய்யப்பட்டவையா? இது பற்றி கண்டிப்பாக ஆய்வு செய்யப்பட வேண்டும்

எந்த ஒரு காரியமும் ஒரு வணக்கமாகக் கருதப்பட வேண்டுமானால் – அதைச் செய்வதால் மறுமையில் ஏதேனும் நன்மை கிடைக்கும் என்று நம்ப வேண்டுமானால் – அந்தக் காரியம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களால் கற்றுத் தரப்பட்டிருக்க வேண்டும் அல்லது அவர்கள் முன்னிலையில் அக்காரியம் நிகழ்ந்து அதை அவர்கள் அங்கீகரித்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத எந்தக் காரியமும் ஒரு வணக்கமாக – மறுமையில் நன்மை யளிப்பதாக ஆக முடியாது. இது இஸ்லாத்தின் அடிப்படை விதி.

இந்த விதியைப் புரிந்து கொள்வதற்கு மிகப் பெரிய ஆராய்ச்சி ஏதும் தேவையில்லை. ‘அல்லாஹ் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைத் தனது இறுதித் தூதராக அனுப்பி வைத்தான். அவர்கள் வழியாக முஸ்லிம்கள் செய்ய வேண்டிய அனைத்து வணக்கங்களையும் கற்றுத் தந்தான். அவர்களுக்குப் பின் எவருக்கும் வஹீ – இறைச் செய்தி – வர முடியாது” என்ற அடிப்படைக் கொள்கையை விளங்கியிருந்தால் போதும். இந்த விதியைப் புரிந்து கொள்ள முடியும்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்குப் பின் ஒரு வணக்கத்தை மற்றவர்களும் ஏற்படுத்தலாம் என்று யாரேனும் கருதினால் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வணக்கங்களை முழுமையாகக் கற்றுத் தரவில்லை என்று அவர் கருதுகிறார். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்குப் பின் மற்றவர்களுக்கும் வஹீ வரக் கூடும் என்றும் அவர் கருதியவராகிறார்.

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நான் நிறைவாக்கி விட்டேன். எனது அருட்கொடை களை உங்களுக்கு முழுமையாக்கி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்குரிய வாழ்க்கை நெறியாக நான் அங்கீகரித்து விட்டேன். (அல்குர்ஆன் 5:3)

‘நமது உத்தரவின்றி யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும்” என நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷh(ரலி) நூல்: முஸ்லிம் (3541)

‘நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்” எனவும் நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷh (ரலி) நூல்கள்: புகாரி 2697 முஸ்லிம் 3540

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இவ்வுலகில் வாழும் போதே இம்மார்க்கத்தை முழுமைப்படுத்தி விட்டதாக அல்லாஹ் மேற்கண்ட வசனங்களில் கூறுகின்றான்.

மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டது என்றால் என்ன பொருள்? அதுவும் அல்லாஹ்வே முழுமைப்படுத்தி விட்டான் என்று கூறினால் அதற்கு என்ன பொருள்? மார்க்கத்தில் எவையெல்லாம் உள்ளனவோ அவை ஒவ்வொன்றையும் நான் கூறி விட்டேன். புதிதாக எதையும் உருவாக்கிட அவசியமில்லை. அது கூடாது என்பதைத் தவிர இதற்கு வேறு பொருள் இருக்க முடியாது. அல்லாஹ்வால் நேரடியாக முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் மவ்லிது இருக்கவில்லை என்பதே மவ்லிதை நிராகரிக்கப் போதுமான காரணமாகவுள்ளது.

மேற்கண்ட இரண்டு நபிமொழிகளும் கூறுவது என்ன? நாம் எந்த ஒரு அமலைச் (நல்லறத்தைச்) செய்வதாக இருந்தாலும் அது பற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஏதும் கட்டளை பிறப்பித்திருக்கிறார்களா? என்று பார்க்க வேண்டும். அவர்களது கட்டளையில்லாமல் எந்த ஒரு அமலைச் செய்தாலும் அது அல்லாஹ்வால் நிராகரிக்கப்படும் என்பதைத்தான் மேற்கண்ட நபிமொழிகள் கூறுகின்றன. மவ்லிது ஓதுமாறு நாயகம்(ஸல்) அவர்கள் எந்தக் கட்டளையும் பிறப்பிக்காததே மவ்லிதை நிராகரிக்க மற்றொரு காரணமாக அமைகின்றது.

தமிழகத்தில் ரபீவுல் அவ்வல் மாதத்தில் சுப்ஹான மவ்லிதும், ரபீவுல் ஆகிர் மாதத்தில் முஹ்யித்தீன் மவ்லிதும் ஓதப்படுகிறது. ரபீவுல் ஆகிர் மாதத்தில் ஓதப்படும் முஹ்யித்தீன் மவ்லிது ஏன் ஓதப்படுகிறது? முற்காலத்தில் வாழ்ந்த அப்துல்காதிர் ஜீலானி என்ற பெரியாரை புகழ்வதற்காகவே இந்த மவ்லித் ஓதுகிறோம் என்று கூறுகின்றனர்.

அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் மிகச் சிறந்த மார்க்க மேதை! உயிர் பிரியும் வரை ஏகத்துவத்தை நிலைநாட்டப் போராடிய பெரியவர்! இஸ்லாத்தின் மேன்மைக்காக உழைத்த மார்க்க சீலர் என்று நாம் அவரை மதிக்கிறோம். அவரது சேவையை மெச்சுகின்றோம். ஆயினும் அவரது பெயரால் போலிகள் சிலர் இட்டுக்கட்டி அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்(ஸல்) அவர்களுக்கும் அப்துல் காதிர் ஜீலானி அவர்களுக்கும் மாற்றமாகக் கதையை புனைந்து முஹ்யித்தீன் மவ்லிதில் இடம்பெறச் செய்துள்ளனர்.

காயல்பட்டிணத்தைச் சார்ந்த மஹ்மூத் என்பவரால் சில ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதே இந்த முஹ்யித்தீன் மவ்லிது. முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களை அல்லாஹ்வின் துதருக்கு நிகராகவும் அல்லாஹ்வின் தூதரை விடச் சிறந்தவராகவும் காட்டும் வகையில் இந்த மவ்லிது அமைந்திருக்கிறது. சில வரிகள் அவரை அல்லாஹ்வுக்கு நிகராகக் காட்டும் வகையில் அமைந்திருக்கின்றன. அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் நிகழ்த்தியதாகக் கூறப்படும் அற்புதங்கள் குர்ஆன் ஹதீஸுடன் நேரடியாக மோதும் வகையில் அமைந்திருக்கின்றன. அவற்றில் சிலவற்றை நாம் காண்போம்.

அபுல் மஆலி என்பார் அப்துல் காதிர் ஜீலானியிடம் வந்து ‘என் மகனுக்குப் பதினைந்து மாத காலம் காய்ச்சல் விலகாமல் உள்ளது” என்றார். அதற்கு அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் ‘காய்ச்சலே! நீ எப்போது இவனைப் பிடித்தாய்? நீ ஹில்லா எனும் ஊருக்குச் சென்று விடு!’ என்று உன் மகனுடைய காதில் கூறு” என்றார்கள். அவர் கட்டளையிடப் பட்டவாறு செய்தார். அதன் பின் அவனுக்குக் காய்ச்சல் ஒரு சிறிதும் மீண்டும் வரவில்லை. பிறகு ஹில்லா எனும் ஊரில் உள்ள ராபிளிய்யா கூட்டத்தினர் அனேகர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டதாகச் செய்தி வந்தது. இவ்வாறு முஹ்யித்தீன் மவ்தில் கூறப்பட்டுள்ளது.

காய்ச்சல் பதினைந்து மாதகாலம் நீடிக்குமா? என்ற கேள்வியை விட்டு விடுவோம். மார்க்க அடிப்படையில் இந்தக் கதை நம்பத்தக்கது தானா? இந்தக் கதையில் அப்துல் காதிர் ஜீலானி நோய் தீர்க்கும் அதிகாரத்தைப் பெற்றிருப்பதாகவும் நோயை வழங்கும் அதிகாரம் பெற்றிருப்பதாகவும் காய்ச்சலுடன் அப்துல் காதிர் ஜீலானி பேசியதாகவும் கூறப்படுகிறது.

நோய்களை வழங்குபவனும் அதை நீக்குபவனும் அல்லாஹ்தான். இந்த அதிகாரத்தில் எவருக்கும் அல்லாஹ் எந்த உரிமையையும் வழங்கவில்லை. இது இஸ்லாத்தின் அடிப்ப டையான கொள்கை. இதை திருமறைக் குர்ஆனிலிருந்தும் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையிருந்தும் அறியலாம்.

‘நான் நோயுற்றால் எனக்கு நோய் நிவாரணம் வழங்குபவன் இறைவன் என்று இப்றாஹீம் (அலை) கூறியதாக அல்லாஹ் கூறுகிறான்.’ (அல்குர்ஆன் 26:80)

இந்த அப்துல் காதிர் ஜீலானியை விடப் பல கோடி மடங்கு சிறந்தவர்களான இப்றாஹீம் நபியவர்கள் அந்த அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உரியது என்கிறார்கள். இவரோ நோய் தீர்க்கும் அதிகாரம் தமக்குரியது என்கிறார்.

‘இந்தப் பூமியிலோ உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.’ (அல்குர்ஆன் 57:22)

‘எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் விருப் பத்தைக் கொண்டே தவிர இல்லை.’ (அல்குர்ஆன் 54:11)

இந்த வசனங்களை நிராகரிக்கும் வகையில் இந்தக் கதை அமைந்தள்ளது. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எத்தனையோ நபித்தோழர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தினரில் பலர் நோய்வாய்ப்பட்டனர். அந்தச் சந்தர்ப்பங்களில் நபி(ஸல்) அவர்கள் அந்த நோயைப் பார்த்துப் பேசி வேறு ஊருக்கு அனுப்பவில்லை. ஏன்? நபி (ஸல்) அவர்களே கூட நோய்வாய்ப்பட்டார்கள்.

‘மனிதர்களின் இறைவா! இந்தத் துன்பத்தை நீக்கு! இறைவா! நீ நிவாரணம் அளிப்பாயாக! உனது நிவாரணம் தவிர வேறு நிவாரணம் இல்லை” என்று துஆச் செய்யுமாறு தான் அந்தச் சந்தர்ப்பங்களில் தம் தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர். (நூல்: புகாரி 5675)

நபி(ஸல்) அவர்களுக்குக் கூட இல்லாத அதிகாரம் அப்துல் காதிருக்கு வழங்கப்பட்டதாக இந்தக் கதை கூறுகிறது. அந்தச் சிறுவனிடம் இருந்த காய்ச்சலை நீக்கியதோடு இவர் நிற்கவில்லை. ஹில்லா என்று ஊருக்கு அந்தக் காய்ச்சலைத் திருப்பி விட்டாராம். கடுகளவு இஸ்லாமிய அறிவு உள்ளவன் கூட இதை நம்பமுடியாது.

முஹ்யித்தீன் மவ்லிதில் உள்ள மற்றொரு கதையை பாருங்கள்:

ஜும்ஆவுக்காக அப்துல் காதிர் நடந்து சென்ற போது அவரது ஆசிரியர் ஹம்மாத் அவரை நதியில் தள்ளினார். இதனால் மண்ணறையில் ஹம்மாதின் கை சூம்பி விட்டது. இதைக் கண்ட அப்துல் காதிர் அல்லாஹ்விடம் துஆச் செய்தார்கள். கப்ரில் உள்ள ஐயாயிரம் பேர் இதற்கு ஆமீன் கூறினார்கள்.

இந்த வரிகளுக்கு விளக்கவுரையாக முஹ்யித்தீன் மவ்லிதில் இடம்பெறும் ஹிகாயத் என்னும் பகுதியையும் பார்த்து விட்டு இந்தக் கதையில் வரும் அபத்தங்களை ஆராய்வோம்.

ஒரு நாள் நீண்ட நேரம் அப்துல் காதிர் வெயிலில் நின்றார். அவருக்குப் பின் ஏராளமான வணக்கசகாகள் நின்றனர். நீண்ட நேரம் நின்று விட்டுப் பின்னர் சந்தோஷத்துடன் அவர் திரும்பியதைப் பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கவர் ‘ஒரு நாள் நான் ஹம்மாதுடன் ஜும்ஆ தொழச் சென்றேன். நதியோரத்தை நாங்கள் அடைந்த போது என்னை அவர் நதியில் தள்ளினார். அப்போது நான் அல்லாஹ்வின் பெயரால் ஜும்ஆவின் குளிப்பை நிறைவேற்றுகிறேன்’ என்றேன்.

நதியிலிருந்து வெளியேறி அவர்களைத் தொடர்ந்தேன். அவரது சீடர்கள் என்னைப் பழித்தனர். அவர் அதைத் தடுத்தார். இன்று கப்ரில் ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டவராக நான் கண்டேன். எனினும் அவரது வலது கை சூம்பியிருந்தது. ஏன்? இப்படி என்று நான் கேட்டேன். அதற்கவர்இ இந்தக் கையால் தான் உம்மைத் தள்ளினேன். இதை நீர் மன்னிக்கக்கூடாதா? இதை நல்லபடியாக மாற்றுமாறு அல்லாஹ்விடம் துஆச் செய்யக்கூடாதா?’ என்று கேட்டார்.

நான் அல்லாஹ்விடம் கேட்டேன். ஐந்தாயிரம் வலிமார்கள் தங்கள் கப்ருகளிலிருந்து எழுந்து ஆமீன் கூறினார்கள். உடனடியாக அல்லாஹ் அந்தக் கையை நல்லபடியாக மாற்றிவிட்டான். அந்தக் கையால் அவர் என்னிடம் முஸாஃபஹாச் செய்தார் எனக் கூறினார். இந்தக் கதையிலுள்ள அபத்தங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

அபத்தம் – 1 ஜும்ஆ தினத்தில் குளிப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும். இறைநேசர்கள் இது போன்ற சுன்னத்துக்களை விட்டுவிட மாட்டார்கள். ஆனால் அப்துல் காதிர் குளிக்காமலே ஜும்ஆவுக்குச் சென்றிருக்கிறார். ஹம்மாத் அவரைப் பிடித்துத் தள்ளிய போதுதான் ஜும்ஆவின் குளிப்பை நிறைவேற்றுவதாகக் கூறியுள்ளார். பிடித்துத் தள்ளாவிட்டால் குளிக்காமலே சென்றிருப்பார். இதிருந்து அப்துல் காதிர் சுன்னத்தைப் பேணாதவர் என்று இந்த கதை கூறுகின்றது.

ஒரு சுன்னத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் ஈடுபாட்டுடனும் விருப்பத்துடனும் செய்யவேண்டும். வலுக் கட்டாயமாகத் தள்ளப்பட்டு செய்தால் அது சுன்னத்தை நிறை வேற்றியதாக ஆகாது. இந்த அடிப்படை விஷயம் கூட அப்துல் காதிருக்குத் தெரியவில்லை என்று இந்தக் கதை கூறுகின்றது.

அபத்தம் – 2 கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவரை அப்துல் காதிர் சந்தித்து உரையாடியதாக இந்தக் கதை கூறுகின்றது. இந்தச் சந்திப்பு கனவு போன்ற நிலையில் நடக்கவில்லை. மாறாக நேருக்கு நேர் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அப்துல் காதிரும் ஹம்மாதும் ஒருவரை மற்றவர் முஸாஃபஹா செய்தார்கள் என்பதிருந்து இதை அறியலாம். உயிருடன் இவ்வுலகில் இருப்பவர் இறந்தவருடன் நேருக்கு நேராகச் சந்திப்பது நடக்க முடியாதது என்று இஸ்லாம் கூறுகின்றது. எந்த ஆத்மாவுக்கு இறைவன் மரணத்தை ஏற்படுத்தி விட்டானோ அவற்றைத் தன் கைவசத்தில் வைத்துக் கொள்கிறான். (அல்குர்ஆன் 39:42)

அவர்கள் (மரணித்தது முதல்) திரும்ப எழுப்பப்படும் வரை அவர்களுக்குப் பின் ஒரு திரை இருக்கின்றது. (அல்குர்ஆன் 23:99)

இறந்தவர்களுக்கு இவ்வுலகில் வாழ்வோருக்குமிடையே எவ்விதத் தொடர்பும் கிடையாது என்பதை இவ்வசனங்கள் அறிவித்துள்ளன. கப்ரில் உள்ளவரை அப்துல் காதிர் ஜீலானி நேருக்கு நேராகச் சந்தித்ததும் அவருடன் உரையாடியதும் முஸாபஹா செய்ததும் பச்சைப் பொய் என்பதை இவ்வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

இந்தக் கதையில் ஹம்மாத் என்பவரின் கை சூம்பியிருந்ததைத் தவிர மற்றபடி அவர் நல்ல நிலையில் உயர்ந்த அந்தஸ்துடன் இருந்ததாகக் கூறப்படுகின்றது. நல்ல மனிதர்கள் கப்ரில் எந்த நிலையில் இருப்பார்கள் என்பதை நபி(ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர். அந்த விளக்கத்துக்கு மாற்றமாக இந்தக் கதை அமைந்திருக்கின்றது.

…பின்னர் நல்லடியாரின் மண்ணறை விரிவுபடுத்தப்படும். ஒளிமயமாக்கப்படும். பின்பு அவரை நோக்கி உறங்குவீராக எனக்கூறப்படும். ‘நான் எனது குடும்பத்தினரிடம் சென்று இந்த விபரங்களை கூறிவிட்டுத் திரும்பி வருகிறேன்” என்று அம்மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள் ‘நெருக்கமானவரைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாதவாறு புது மணமகன் உறங்குவது போல் நீர் உறங்குவீராக! அந்த இடத்திலிருந்து உம்மை இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக!” என்று கூறுவார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா(ரலி) நூல்: திர்மிதி (991)

இது நபியவர்கள் தந்த விளக்கம். நல்லடியார்கள் உறக்க நிலையில் உள்ளனர். யாராலும் அவர்களை எழுப்ப முடியாது. மறுமை நாளில் இறைவனால் அவர்கள் எழுப்பப்படும் வரையிலும் அவர்கள் உறங்கிக் கொண்டே இருப்பார்கள் என்பதை இந்த ஹதீஸ்கள் அறிவிக்கின்றன. அப்துல் காதிர் ஹம்மாத் என்பவரை நேருக்கு நேர் சந்தித்தாகக் கூறுவது பொய் என்பதற்கு இந்த ஹதீஸ் சான்றாகும்.

அபத்தம் – 3 ஐயாயிரம் அவ்லியாக்கள் அப்துல் காதிரின் துஆவுக்கு ஆமீன் கூறியதாகவும் இந்தக்கதை கூறுகின்றது. அவ்லியாக்கள் உறக்கத்தில் இருப்பார்கள் என்ற மேற்கண்ட ஹதீஸிற்கு இது முரணாக உள்ளது. மேலும் இறந்தவரைக் கேட்கச் செய்ய நபியாலும் முடியாது என்ற குர்ஆனின் கூற்றுக்கு (30:52 35:22) முரணாக உள்ளது.

திருக்குர்ஆனுக்கும்இ ஆதாரப்பூர்வமான நபிமொழிகளுக்கும் நேரடியாக மோதக்கூடிய இதுபோன்ற அபத்தங்கள் நிறைந்த இந்த மவ்லிதை ஒரு உண்மையான முஸ்லிம் எழுதியிருப்பானா?! அல்லது அன்னியர்களின் சதிதிட்டமா? நமக்கு பொருள் தெரியாது என்பதால் மார்க்க அறிஞர்கள் ராகமிட்டுப் பாடி நம்மை ஏமாற்றுகிறார்களா?! என்பதையெல்லாம் நாம் தெளிவாக சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்!

அப்துல் காதிர் ஜீலானி அவர்களைக் கடவுள் நிலைக்கு உயர்த்தும் வகையில் இட்டுக்கட்டப்பட்ட கதைகளின் தொகுப்பே இந்த முஹ்யித்தீன் மவ்லிது. இஸ்லாத்தின் கடமைகள் எத்தனையோ இருக்கும் போது மார்க்கம் அனுமதிக்காத இணை வைப்புக்குக் கொண்டு சேர்க்கும் இந்த மவ்லித் தேவைதானா? என்பதை ரபியுல் ஆகிர் மாதமான இம்மாதத்தில் சிந்திப்போம்: செயல்படுவோம். அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் வழிநடத்தி செல்வானாக!
thanks for tntj....

March 11, 2010

இறந்தவர்களுக்காக குர் ஆன்,யாசீன் போன்றவைகளை ஓதலாமா?

"மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு ஒன்றும் இல்லை" (அல்குர்ஆன், 053:039)
இந்த வசனத்தை ஆதாரமாகக்கொண்டு இறந்தவர்களுக்காக தர்மம் செய்தால் அந்தப் பலன் இறந்தவரைச் சென்று அடையாது என்ற ஒரு கருத்து மார்க்க அறிஞர்களிடையே இருக்கிறது. எனினும் மரணித்தவரின் சார்பாக வேறொருவர் தர்மம் செய்தால் அதற்கான நன்மை மரணித்தவருக்குக் கிடைக்குமா? என்பதை நபிமொழிகளின் வெளிச்சத்தில் சற்று விரிவாகக் காண்போம்.




"மனிதன் இறந்து விட்டால் அவனுடைய மூன்றுச் செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்று விடுகின்றன. (அவை)
1. நிலையான அறக்கொடை
2.பயன்பெறப்படும் கல்வி
3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை" என்று


அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
"மனிதன் முயற்சித்ததைத் தவிர அவனுக்கு வேறில்லை" என்ற திருக்குர்ஆன் 053:039 வசனத்தின் விளக்கமாகவே இந்த நபிமொழி அமைந்திருக்கிறது.

1, நிலையான அறக்கொடை.
பள்ளிவாசல், கல்விக்கூடம், மருத்துவமனை, மக்கள் தங்குவதற்காக சத்திரம், கிணறு, நிழற்கொடை, தண்ணீர் பந்தல், சுமைதாங்கி இது போன்ற மக்கள் பயன்பெறும் அறக்கொடைகளைச் (வக்ஃப்) செய்தவருக்கு அவர் இறந்த பின்னும் அதற்கான நன்மைகள் அவருக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும்.


2, பயன்பெறும் கல்வி
கல்வி என்பதில் கல்வி நிலையம் சென்று கற்பதும், தொழில் ரீதியாக தனி ஒரு மனிதரிடம் கல்வி கற்பதும் இதில் அடங்கும். இதன் மூலம் கல்விச் சேவைத் தொடர்கிறது. ஒருவர் தான் கற்ற கல்வியைக் கொண்டு நல்ல வழியில் முன்னேற்றம் அடைந்து பயன் பெறுகிறார் என்றால் அந்தக் கல்வியைப் பயிற்றுவித்தவருக்கும் அதில் நன்மை கிடைக்கும்.

3, நல்ல குழந்தைகள்
இறந்தவருக்காக அவரின் நல்ல சந்ததிகள் செய்யும் பிரார்த்தனைகளாலும் அவருக்கு நன்மைகள் சென்றடையும். ஸாலிஹான - நல்லப் பிள்ளைகளாக வளர்ப்பதில் தந்தையின் கல்வி - போதனைகளின் முயற்சி மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
இறந்தவருக்காக சென்றடையும் நன்மைகளில் இந்த மூன்று விஷயங்களிலும் இறப்பதற்கு முன்னர் அவர் செய்த முயற்சிகள் இருப்பதால் 053:039வது இறைவசனத்திற்கு இந்த ஹதீஸ் பொருத்தமாகவே இருக்கிறது. மேலும், இறந்தவர் விட்டுச் சென்றச் சொத்திலிருந்து தர்மம் செய்தால் அத்தர்மத்தின் நன்மையும் அவருக்குக் கிடைக்கும். என கீழ்வரும் நபிமொழிகள் அறிவிக்கின்றன.
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் ''என் தந்தை சொத்துகளை விட்டுவிட்டு இறந்து போனார். அவர் இறுதி விருப்பம் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அவருக்காக நான் தர்மம் செய்தால் அவருக்கு அது பரிகாரம் ஆகுமா?'' என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''ஆம்'' என்றார்கள். (முஸ்லிம்)

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! இறுதி விருப்பங்கள் தெரிவிக்காமலேயே என் தாயார் திடீரென இறந்து விட்டார். அவர் (இறப்பதற்கு முன்பு) பேச முடிந்திருந்தால் தர்மம் செய்(யச் சொல்லியிருந்)திருப்பார் என்று நான் கருதுகிறேன். அவர் சார்பாக நான் தர்மம் செய்தால் அவருக்கு நன்மை உண்டா?'' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் ''ஆம்'' என்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

இதிலிருந்து இறந்தவர் விட்டுச் சென்றச் சொத்துக்களிலிருந்து வேறொருவர் தர்மம் முதலான நல்ல காரியங்களைச் செய்தால் அதன் நன்மைகள் அவருக்குச் சென்று சேரும் என்பது விளங்கிக் கொள்ள முடிகிறது.

''நோன்புகள் கடமையான நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவர் சார்பாக அவர் பொறுப்பாளர் நோன்பு நோற்பார்'' என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ''அல்லாஹ்வின் தூதரே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்து விட்டார். அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா?'' என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ''ஆம்! அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுதற்கு அதிகத் தகுதி படைத்தது'' என்று கூறினார்கள். (புகாரி)


இறந்தவருக்காகப் பாவமன்னிப்புக் கோருவது
அவர்களுக்குப் பின் வந்தோர் ''எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக!... (அல்குர்ஆன், 059:010)

''இறைவா! எங்களில் உயிருடனிருப்பவர்களையும், மரணித்தவர்களையும், இங்கு வந்திருப்போரையும், வராதவர்களையும், சிறுவர்களையும், பெரியவர்களையும், எங்களில் ஆண்களையும், பெண்களையும் மன்னித்து விடுவாயாக!''... என்று நபி(ஸல்) அவர்கள் ஜனஸா தொழுகையில் துஆச் செய்வார்கள். (அபூதாவூத், இப்னுமாஜா திர்மிதீ, நஸயீ)


''இறைவா! இவரை மன்னித்து அருள் புரிவாயாக!'' (முஸ்லிம்)
"இறந்து விட்ட நல்லடியார்கள் மீது இறைவனின் சாந்தி நிலவட்டும்" என ஒவ்வொருத் தொழுகையிலும் பிராத்தனை செய்ய அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கற்றுத்தந்திருக்கிறார்கள்.


எனவே இறந்தவர் சார்பாக தர்மம் செய்யலாம், உணவு வழங்கலாம், நோன்பு நோற்கலாம், அவருக்காக இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரலாம். இஸ்லாத்தில் இதற்கான ஆதாரங்கள் இன்னும் ஏராளம் இருக்கின்றன. ஆனால் இறந்தவர் சார்பாக யாஸீன் சூராவை ஓதலாம் என்றோ, குர்ஆன் ஓதி இறந்தவருக்காக ஹதியா செய்தால் அதன் நன்மைகள் அவரைச் சென்றடையும் என்றோ இஸ்லாம் எங்கும் சொல்லவில்லை!

இறந்தவரின் மையத்துக்கு அருகில் யாஸீன் சூராவை ஓதுங்கள் என்பது போன்று இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதுவது தொடர்பாக வரும் நபிமொழிகள் பலவீனமானவைகளாகும்.

''உங்களில் இறந்தவர் மீது யாஸீன் ஓதுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என மஃகில் பின் யாஸர்(ரலி) அறிவிக்கும் செய்தி அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், ஹாகிம் ஆகிய நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்த ஹதீஸ்களில் அபூ உஸ்மான் என்பவர் தமது தந்தை வழியாக அறிவிக்கிறார். அபூ உஸ்மானும், அவரது தந்தையும் யாரென அறியப்படாதவர்கள் என்பதால் இந்தச் செய்தி பலவீனமடைகிறது.

பைஹகியின் மற்றொரு அறிவிப்பில் மஃகில் பின் யாஸர்(ரலி) வழியாக ஒரு மனிதர் கூறுவதாக அறிவிக்கப்படுகிறது. ஒரு மனிதர் என்றால் யார் என வரலாறு தெரியாததால் அவரது நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடியாது. எனவே இதுவும் நம்பகமானச் செய்தி என்ற தன்மையை இழந்து பலவீனமடைகிறது.
''மரணத்தை நெருங்கியவரின் அருகில் யாஸீன் ஓதினால் அவரது வேதனை இலேசாக்கப்படும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று முஸ்னத் அல்ஃபிர்தவ்ஸ் என்ற நூலில் உள்ள அறிவிப்பில் இடம்பெறும் ஸாலிம் பின் மர்வான் என்பவர் பலவீனமானவர்.

''இறந்தவரின் தலைமாட்டில் அல்ஹம்து சூராவையும், கால்மாட்டில் பகரா அத்தியாயத்தின் கடைசி வசனங்களையும் ஓதுங்கள்'' என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக தப்ரானியின் அல்கபீர் என்ற நூலிலுள்ள அறிவிப்பில் அய்யூப் பின் நஹீக் என்பவரும், யஹ்யா பின் அப்துல்லாஹ் என்பவரும் பலவீனமானவர்கள் என ஹதீஸ் கலை அறிஞர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்.

எனவே இறந்தவருக்காக யாஸீன் ஓதுங்கள், குர்ஆன் ஓதுங்கள் என வரும் ஹதீஸ்களெல்லாம் பலமற்றவை. ''நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்'' (புகாரி, முஸ்லிம்) என்ற எச்சிரிக்கையை நினைவில் பதிவு செய்து, இஸ்லாம் ஏவாத எந்தக் காரியத்தையும் செய்வதிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும். இறந்தவர்களின் மறுவுலக நன்மைக்காக செய்ய வேண்டியவற்றை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டிய வழியில் செய்வதே சிறப்பு.

உயிருடனிப்பவர் குர்ஆனை ஓதினால் அவருக்கு நன்மை உண்டு!
"குர்ஆன் வசனம் ஓதப்படும் போது அதை செவிதாழ்த்தி கேளுங்கள் நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்".(7 : 204) என்றதன் அடிப்படையில் ஓதுவதை செவிமடுத்தால் செவிமடுப்பவர் அருள் செய்யப்படுவார்.

மரணத்தருவாயில் அல்லது மரணத்திற்கு முன் செவியேற்க்கும் நிலையில் ஒருவர் இருக்கும் போது அவருக்கு அருகில் ஒருவர் திருகுர்ஆனின் வசனங்களை ஓதி அவர் செவியேற்பாராயின் மேற்கண்ட வசனத்தின் அடைப்படையில் நன்மை கிடைக்கலாம். ஆனால், "மரணித்தவரைச் செவியேற்கச் செய்ய உம்மால் கூட இயலாது" என நபி(ஸல்) அவர்களைப் பார்த்து இறைவன் கூறுகிறான்.

மரணித்தவரால் குர்ஆனை ஓதவும் முடியாது, ஓதுவதைக் கேட்கவும் முடியாது. மேலும், "இது நேர் வழிகாட்டும்" என குர்ஆன் பற்றி இறைவன் கூறுகிறான். வழிகாட்டல் என்பது உயிருடன் இருப்பவர்களுக்குத் தான் அவசியம். இறந்தவர்களுக்கல்ல! ஓதப்படுவதைச் செவியேற்கும் நிலையிலேயே இல்லாதவருக்கு, வழிகாட்டல் என்ற வகையில் கூட எவ்வித நன்மையும் இல்லை.