February 25, 2009

கப்ரில் நபி(ஸல்) அவர்களின் நிலை

ஜும்ஆவின் தினத்தில் என்மீது அதிகமாக ஸலவாத் ஓதுங்கள் அது எனக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் கப்ரில் மடிந்தவர்களாயிருக்கும் போது எங்களின் ஸலவாத்தை உங்களுக்கு எவ்வாறு எடுத்துக் காட்டப்படும்? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி தின்பதை விட்டும் தடை செய்துள்ளான் என்றார்கள். (அறி: ஷத்தாத்பின் அவ்ஸ் (ரலி) நூல்: அபூதாவூத், இப்னு மாஜ்ஜா, நஸயீ, தாரமீ, அஹ்மத், இப்னுஹிப்பான்) நிச்சயமாக பூமியில் உலா வந்து கொண்டிருக்கும் சில மலக்குகள் அல்லாஹ்வுக்கு உள்ளனர். அவர்கள் எனது உம்மத்துகளிடமிருந்து எனக்கு ஸலவாத்தைச் சேர்ப்பித்துக் கொண்டிருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறி: இப்னு மஸ்ஊத்(ரலி) நூல்: நஸயீ, தாரமீ) மேற்காணும் ஹதீஸின் மூலம் நபிமார்களின் உடலை மண் தின்பதை விட்டும் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை அறிகிறோம். இப்பாதுகாப்பு நபிமார்களின் உடலுக்கு உண்டு என்பதாகத்தான் ஹதீஸில் வந்துள்ளதே தவிர, சிலர் கூறுவது போல் குர்ஆன் மனனம் செய்த ஹாபிழ்கள் மற்றும் இறை நேசச் செல்வர்களுக்கும் உண்டு என்பதற்கான சரியான ஆதாரம் ஹதீஸ்களில் கிடையாது. அவ்வாறு உண்டு கூறப்படும் அனைத்து ஹதீஸ்களும் பலகீனமாகவும், இட்டுக்கட்டப்பட்டவையாகவும் உள்ளன. அடுத்து நாம் நபி(ஸல்) அவர்களுக்குக் கூறும் ஸலாமும், அவர்கள் மீது ஓதும் ஸலவாத்தும் தமக்கு சேர்ப்பிக்கப்படுவதாக அவர்கள் கூறி இருப்பதை காணுகிறோம். அவர்களின் பால் சேர்ப்பிக்கப்படும் ஸலவாத்தையும், ஸலாமையும் எவ்வாறு அவர்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது என்பதப் பின்வரும் அறிவிப்பு விளக்குகிறது. உங்களில் ஒருவர் எனக்கு ஸலாம் கூறினால், அல்லாஹ் எனது உயிரை என்னில் மீண்டும் கொண்டு வந்து சேர்க்கிறான். அதன் பயனாக அவருக்கு பதில் ஸலாம் அளிக்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அறி:அபூஹுரைரா(ரலி) நூல்; அபூதாவூத், பைஹகீ, அஹ்மத்) இவ்வறிப்பின் மூலம் நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறும்போதும், அவர்கள் மீது ஸலவாத்தோதும் போதும், அவற்றை அவர்களுக்கு சேர்ப்பிக்கக் கூடிய அந்த சந்தர்ப்பத்தில் மட்டும் அவர்களின் உயிரை அவர்களுக்கு மீண்டும் கொண்டு வரப்படுகின்றது என்பதானது, அவர்கள் எப்போதும் கப்ரில் ஹயாத்தாக உயிரோடு இல்லை என்பதை மிகத் தெளிவாகக் காட்டுகின்றது. ஆகவே, நபி(ஸல்) அவர்களுக்கு கூறப்படும் ஸலவாத்தையும், அவர்கள் மீது ஓதப்படும் ஸலவாத்தையும் மலக்குகளின் வாயிலாக சேர்ப்பிக்கப்படுகின்றது. அல்லது எடுத்துக் காட்டப்படுகின்றது என்ற பொருளுள்ள வாசகமே இடம் பெற்றுள்ளது. மலக்குகளின் வாயிலாக தமக்கு சேர்ப்பிக்கப்படும் ஸலவாத், ஸலாம் முதலியவற்றைத்தவிர மற்றவர் பேசுவதையும் செவியுருகிறார்கள், கப்ரில் உயிருடையவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதற்கும் சரியான சான்று எதுவுமில்லை என்று ஹதீஸ்கலா வல்லுனர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

No comments:

Post a Comment