June 13, 2009

முஸ்லிம்களே ஒன்று படுவீர்

மேலும் நீங்கள் யாவரும் (ஒன்று சேர்ந்து) அல்லாஹ்வுடைய (வேதமாகிய) கயிற்றை பலாமாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள். (அல்குர்ஆன் 3:103)

இன்றைய உலகில் இஸ்லாம் வேகமாகப் பரவி வருகிறது. இஸ்லாத்தில் இணையும் புதியவர்களிடம் ஓர் உத்வேகம் இயல்பாகவே ஏற்பட்டு விடுகிறது. இதுவரை தங்களை பிணைத்திருந்த விலங்குகளை உடைத்தெரிந்து தாங்கள் பெற்ற சுதந்திரத்தை ஏனையோரும் அனுபவித்திட வேண்டும் என்ற உத்வேகமே அது. ஆனால் இங்கு வேதனை என்னவென்றால் இன்றைய உலகில் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு முஸ்லிம்களே பல விதத்தில் முட்டுக்கட்டையாக உள்ளனர் என்பதுதான்.

இன்றைய மார்க்க அறிஞர்கள் என்போரும், அதிகார வர்க்கத்தினரும் தங்கள் அதிகாரங்களை தக்க வைத்துக்கொள்வதற்காகவே இஸ்லாத்தின் தனித்தன்மையை குலைத்து மாற்று வண்ணங்கள் பூசுகின்றனர். இந்நிலைகளை தகர்த்து இஸ்லாத்தைப் பூரணமாக நிலை நாட்டப் புறப்பட்ட இஸ்லாமிய இயக்கங்களோ சிறுசிறு கருத்து வேறுபாடுகளையும் அல்லாஹ் 4:59 வசனத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல் குர்ஆன் ஹதீஸை மட்டும் கொண்டு முடிவுக்கு வராமல் தங்கள் சொந்த யூகங்களை புகுத்தி அவற்றை பூதாகார பிரச்னையாக்கி தங்களுக்குள் பிளவுண்டு கிடக்கின்றன.

துண்டாடப்பட்ட பட்ட இயக்கங்கள் அமைப்புகள் ஒவ்வொன்றும் ஒற்றுமையாக அல்லாஹ்வின் கயிற்றை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என ஒங்கி ஒலிக்கின்றனர். இவர்கள் எல்லோரும் பற்றிப் பிடித்திருப்பது குர்ஆனைத்தான். ஆனால் இவர்களிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால்தான் இப்படி பிளவுண்டு கிடக்கின்றனர். இவர்கள் இலக்கை எட்ட முடியாமல் எங்கோ நின்று எதையோ செய்து கொண்டு இதுதான் 'இஸ்லாமியப் பணி' என்று திருப்திப் பட்டுக்கொள்கின்றனர்.

குர்ஆன் என்ற தனது கயிற்றை அடியார்கள் அனைவரையும் ஒற்றுமையாகப் பற்றிப் பிடிக்கத்தான் அல்லாஹ் கோருகின்றான். இங்கே நிகழ்வதென்ன? ஜமாஅத்தே இஸ்லாமி என்றும், முஜாஹித் என்றும், ஸலபி ஜமாஅத் என்றும், அஹ்லே ஹதீஸ் என்றும், JAQH என்றும், TNTJ என்றும் இன்னும் எத்தனையோ இயக்கங்கள் அமைப்புகள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்கிறார்கள். ஆனால் தாங்கள் குர்ஆனையே பற்றிப் பிடித்திருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். ஏன் இந்த நிலை?
இவர்களின் இத்தகைய போக்கினால் இஸ்லாமிய மறுமலர்ச்சி என்பது வெறும் கனவாகத்தான் இருக்கும். அடுத்து நம்மிடையே ஏற்படும் கருத்து வேற்றுமைகளை களைய சம்பந்தப்பட்ட அனைவரும் ஒன்றுகூடி இறை வழிகாட்டுதலை ஆராயமல் அவசரப்பட்டு தங்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தி விடுவது இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு நம்மால் ஏற்படுத்தப்படும் மாபெரும் முட்டுக்கட்டைதான். இறை மார்க்கத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் இத்தகைய நம் செயல்களுக்காக நாளை மறுமையில் இறைவன் முன் நாம் குற்றவாளிக் கூண்டில் நின்றேயாக வேண்டும்.

இறைவன் தன் திருமறையில் கடுமையாக இப்படி எச்சரிக்கிறான்
"(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனையுண்டு. (அல்குர்ஆன் 3:105)

No comments:

Post a Comment