October 13, 2009

பர்லு தொழுகைக்குப் பிறகு கூட்டு துஆ

நபி (ஸல்) அவர்களும் அவர்களின் கலீபாக்களும், மற்றும் சஹாபாக்களும் பர்லு தொழுகைக்குப் பிறகு கூட்டாக துஆ ஓதியதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. அதாவது இமாம் துஆ ஓத மற்றவர் "ஆமீன் ஆமீன்" என்று கூறும் நிலை (இன்று நமது பகுதிகளில் நடைமுறையில் இருப்பது போல்) அவர்கள் காலத்தில் கிடையாது.
நம்மைவிட துஆ கேட்கும் வகையில் பன்மடங்கு ஆர்வம் கொண்டுள்ள நபி அவர்களும், அவர்களின் உத்தம ஸஹாபாக்களும் ஒரு நேரத் தொழுகையிலும் கூட இமாம் துஆ ஓத, மற்றவர் ஆமீன் கூறும் அமைப்பில் இருந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் ஹதீஸ்களில் கிடையாது. மாறாக நபி அவர்களும், சஹாபாக்களும் ஜமாஅத் முடிந்தவுடன் தனித்தனியே துஆ ஓதியுள்ளார்கள் என்பதையே ஹதீஸ்களின் வாயிலாக அறிய முடிகிறது.

நபி (sal) அவர்கள் தொழுகையிலிருந்து திரும்பிவிட்டால் "மும்முறை" أأَسْتَغْفِرُ اللهَ

அஸ்தஃபிருல்லாஹ்" என்று (கூறி) பாவமன்னிப்புத் தேடுவார்கள்.

(பின்னர்)

اللَّهُمَّ أَنْتَ السَّلأمُ وَ مِنْكَ السَّلأمُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَ الإِكْرَم

"அல்லாஹும்ம அந்த்தஸ்ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபாரக்த்த யாதல் ஜலாலி வல்இக்ராம்" என்று ஓதுவார்கள். என்று ஸவ்பான் (ரழி) அறிவித்துள்ளார்கள். (நூல்:முஸ்லிம், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா, அஹ்மத்)
பொருள்:யா அல்லாஹ்! நீயே சாந்தியானவன். மேலும் உன்னிடமிருந்தே சாந்தி பிறக்கிறது கண்ணியமும், மகத்துவமும் மிக்கவனாகிய நீயே மிக மேலானவனாகும்.
மேற்காணும் துஆவை நபி (ஸல்) அவர்கள் தாம் தொழ வைத்துவிட்டுத் தனித்த நிலையில் ஓதினார்களே அன்றி அவர்கள் தொழ வைத்தபின் ஓதிய துஆக்களுக்கு எந்த ஸஹாபியும் ஆமீன் கூறினார்கள் என்பதை ஹதீஸ்களில் காணமுடியவில்லை.
ஆகவே நபி (ஸல்)அவர்கள் தனித்து ஓதியது போன்றே மற்ற ஸஹாபாக்களும் ஓதியிருப்பார்கள் என்பதை நம்மால் உணர முடிகிறது.

நபி ஸல்அவர்கள், உங்களில் ஒருவர் தொழுதுவிட்டால் அவர் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ ஆரம்பித்து, பின்னர் நபி அவர்கள் மீது ஸலவாத்தோதி, பிறகு அவர் தாம், நாடியவற்றை (அல்லாஹ்விடம் கேட்டுப்) பிரார்த்திப்பாராக! என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஃபுழாலத்து பின் உபைத்(ரழி) நூல்: திர்மிதீ)

நான் ஒரு முறை நபி (ஸல்)அவர்களுடன் அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) ஆகியோர் இருக்கும் போது தொழுது கொண்டிருந்தேன். நான் தொழுதுமுடித்து உட்கார்ந்தவுடன் அல்லாஹ்வை போற்றிப் புகழ ஆரம்பித்து, பின்னர் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூறிவிட்டுப் பின்னர் எனக்காக துஆ கேட்டுக் கொண்டிருந்தேன், அப்போது நபி (ஸல்)அவர்கள் நீர் கேளும்! தரப்படும் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் மஸ்ஊத்(ரழி) நூல்:திர்மிதீ)

அல்லாஹ்வின் தூதரே! (அல்லாஹ்விடம்) மிகவும் ஏற்று கொள்ளப்படுவதற்கு தகுதிவாய்ந்த துஆ (வின் நேரம்) எது? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், கடைசி இரவின் நடுப்பகுதியும், பர்லான தொழுகைகளுக்குப் பிறகும் என்றார்கள். (அபூ உமாமா(ரழி) திர்மிதீ)

மேற்காணும் ஹதீஸ்களின் வாயிலாக பர்லான தொழுகைகளுக்குப் பிறகுள்ள நேரம் துஆ கபூலாகக்கூடிய நேரம் என்பதையும் நமது தேவைகளை நாமே கேட்டுப்பெற முயற்சிக்க வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் தமது ஸஹாபாக்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளார்கள் என்பதையும் அறிகிறோம்.

இமாம் சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடித்தவுடன் நீங்கள் அனைவரும் ஆமின் கூறுங்கள்! நீங்கள் கூறும் ஆமீன் மலக்குகளின் ஆமீனுக்கு ஒத்தாக அமைந்து விட்டால் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும் என்று தமது ஸஹாபாக்களுக்கு ஆமீன் கூறும்படி ஆர்வ மூட்டிய நபி (ஸல்)அவர்கள் பர்லான தொழுகைகளுக்குப் பிறகு நான் மட்டும் துஆ ஓதுகிறேன் நீங்கள் அனைவரும் நான் ஓதும் துஆவுக்கு ஆமீன் சொல்லிக்கொண்டிருங்கள் என்று ஒருபோதும் ஒரு வார்த்தைகூட அவர்கள் கூறியதாக சரித்திரமே இல்லை. இவ்வாறு எந்த ஸஹாபியும் தாம் மக்களுக்குத் தொழவைத்த பின் அவர்கள் துஆ ஓத மக்கள் ஆமீன் கூறினார்கள் என்று ஹதீஸ் நூல்களில் காணப்படவில்லையே என்று தான் ஹதீஸ் கலா வல்லுனர்கள் கேட்கிறார்கள். இமாம் துஆஓத பின்பற்றி தொழுதவர்கள் ஆமீன் ஆமீன் என்று கூறுவது நல்லது தானே இவ்வாறு செய்தால் என்ன தவறு? என்று பலர் கருதுகிறார்கள். நல்லது தானே என்று கூறுபவர்கள் அந்த நல்லதை நபி அவர்கள் நமக்கு காட்டித் தராமல் சென்று விட்டார்கள் என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

ஒன்றை நல்லதுதான் என்று நாமாகக் கருதிக் கொண்டு எதையும் செய்துவிட்டுப் போவதா? மார்க்கத்தில் நல்லதென்று ஒன்றிருக்குமானால், அது நபி(ஸல்) அவர்கள் கூறிய, அல்லது செய்து காட்டிய, அல்லது அங்கீகாரம் செய்த ஒன்றாகத்தான் அது இருக்க வேண்டுமே அன்றி, நாமாக நடைமுறை படுத்தினால் நல்லதாகிவிட முடியாது.

உங்களை நரகத்தை விட்டும் தூரப்படுத்தி, சுவர்க்கத்தின் பக்கம் உங்களை அணுகச் செய்யும் (எந்த ஒரு நன்மையும் தீமையும்) உங்களுக்குத் தெளிவுபடுத்தப்படாது ஒரு விஷயமும் விடுபட்டு விடவில்லை என நபி அவர்கள் கூறினார்கள். (அபூதர்ரு(ரழி) நூல்: தப்ரானி)

"நபித்தோழர்கள் செய்யாத வணக்க வழிபாடுகள் எதனையும் செய்யாதீகள். முன்சென்றவர்கள் பின் சென்றவர்களுக்கு எதனையும் விட்டு வைக்கவில்லை" என ஹுதைபா(ரழி) அறிவித்துள்ளார்கள்." அல்லாஹ்வின் ஏவல்களைக் கொண்டும், நபி (ஸல்)அவர்களின் நடை முறைகளைக் கொண்டும் மார்க்கத்தை போதுமாக்கிக் கொள்ளுங்கள். அதன் பின்னால் வந்தவர்கள் ஏற்படுத்திய புதுமை(பித்அத்)களை விட்டு விடுமாறு எச்சரிக்கை செய்கிறேன்." என தாபியீன்களின் தலை சிறந்தவரும், சீரிய கலீபஃபாவுமான இப்னு அஜீஸ்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

No comments:

Post a Comment